புதன், ஆகஸ்ட் 13, 2008

மின்னல்

(1)
வாயிற்படியில்,
இல்லாத அழைப்பு மணியில்
விரல்கள் பதித்து அழுத்தியவாறே
நிறைந்து நின்றிருந்த மின்னல் ஒன்று
எனது வருகைக்குக் காத்து நின்று
நான் வந்த பின் சென்று மறைந்த மாயம்
யாரும் சொல்லிப் புரியவில்லை
யாரிடம் கேட்டும் தெரியவில்லை
(2)
இங்குள்ளோர் எல்லாரும் எல்லாமும் தெரிந்த நிலை ஒன்றைத்
தமக்காக்கிக் கொண்டமையால்
எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்ததாய் ஒரு மாயை
ஊடுருவியே கிடக்கிறது
நடுவே வந்து அவர்கள் காணாத மின்னலும்
அவர்கள் அறிவுக்கு மிக அற்பமே
பேசுவதற்கும் கேலி சிரிப்பதற்கும் இன்றைக்கு
இந்த மின்னல் போதுமே

கருத்துகள் இல்லை: